Tuesday 13 October 2015

'இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?' - மஹா பெரியவா - பகுதி மூன்று

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி ( short-cut ) சொன்னமாதிரி இருக்கிறது. 'ஒருத்தன் அந்திமத்தில் எதை எதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்' என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே களேவரம்
தம் தம் ஏவைதி கௌந்தேய ஸதா தத்பாவ பாவித :

இப்படிச் சொல்கிறபோது, வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் ஸரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப்பின் அடைந்து விடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுவரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால் இப்படியில்லாமல், அஸாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று ப்ராணன் போகிறபோது, நினைப்புக்கு வந்துவிட்டால்? இப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு ஸ்வாமி கொடுத்துவிடுகிறார். 'இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!' என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்யத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற ஸமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப 'ஷார்ட்-கட்'தானே?

ஆனால் வாழ்நாள் முழுக்க நினைத்ததுதானே அந்திமத்தில் வரும்? அதெப்படி வேறு ஒரு நினைப்பு அப்போது வரும்? இது எப்படி 'ஷார்ட்-கட்'? சும்மாவுக்காக 'ஷார்ட்-கட்'மாதிரி பகவான் ஏமாற்றுகிறாரா?

இங்கேதான் சாகிற ஸ்திதியில் இருக்கிற ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பண்ணுகிற பெரிய பரோபகாரம் வருகிறது;அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கிற பரம உத்க்ருஷ்டமான பரோபகாரம் !

இயற்கையாக ஒருத்தனுக்கு அந்திமத்தில் ஏதாவது கன்னாபின்னா நினைப்புகளே வரலாம். ரொம்பப் பேருக்கு அப்படித்தான் வருகிறது - அல்லது ஸ்மரணையே தப்பிப் போய்விடலாம். ஆனால் இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருக்கிறவர்கள் பகவந்நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால், அது அவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக்கொண்டே இருக்கும். ஸ்மரணை ஏதோ லவலேசம் ஒட்டிகொண்டிருந்தால்கூட, அந்த உள் பிரக்ஞையில் ஒருவேளை ஈஸ்வர நாமா சுரீல் என்று ஒரு தைப்பு தைத்தாலும் தைக்கும். அவனுக்குத் தானாக பகவான் நினைவு வராமல், வாழ்நாள் முழுதும் நினைத்த விஷயங்கள்தான் அந்திமத்திலும் நினைவுக்கு வந்தாலும், மற்றவர்கள் இப்படி நாமோச்சாரணம் பண்ணினால் அதனாலேயே அவனுக்கு மற்ற நினைவுகள் அமுங்கி பகவானின் நினைப்பு ஏற்படும்படிப் பண்ணலாம்.

நாம் எங்கேயோ ஒரு பீச்சுக்குப் போகிறோம்; அல்லது ஸினிமாவுக்குப் போகிறோம். கண்டதை நினைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டுதான் போகிறோம். ஆனால் போகிற வழியில் ஏதாவது ஒரு ஸத்ஸங்கத்திலிருந்து ''ஹர ஹர மஹாதேவா'', ''ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே'' என்கிற மாதிரி ஒரு கோஷம் வந்தால் சட்டென்று நம்முடைய கன்னாபின்னா நினைப்புப்போய், பகவந்நாமா க்ஷணகாலம் மனஸுக்குள் போய் நம்மைக் கொஞ்சம் உருக்கிவிடுகிறது. 

நாமாவுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஆனதால் வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவிலே ஒரு ஜீவாத்மா உயிருக்காகப் போராடிக் கொண்டு மனஸ் நாலா திசையிலும் அலை பாய்கிறபோது, அல்லது ஸ்மரணை தப்பிக் கொண்டிருக்கிறபோது பக்கத்திலே இருக்கிறவர்கள் பகவந்நாமாவை கோஷித்துக்கொண்டிருந்தால் அது அந்த ஜீவாத்மாவை அதன்மூலமான பரமாத்மாவிடம் இழுப்பதற்கு ரொம்பவும் சக்திகரமான ( effective) வழியாக இருக்கும். ஒருத்தன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாயிருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த ஸம்ஸாரத்திலிருந்து தப்புவதற்கு பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத்தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டால்கூட, நாம் உண்டாக்கிச் தந்து விட்டால் பிடித்துக்கொண்டு விடுவான். இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

உற்றார் ஆர் உளரோ ? உயிர்கொண்டு போம் பொழுது ?
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக் (கு) உற்றார் ஆர்உளரோ ?

என்ற மாதிரி, அந்த அந்திம ஸமயத்தில் எல்லா பந்துமித்ரர்களையும் விட்டுவிட்டுப் புறப்பட்டேயாகவேண்டும் என்னும்போது, அவன் ஒருத்தனே பந்து என்று எந்த ஜீவனும் புரிந்துகொள்ளத்தான் செய்யும். 

புரிய வைக்காமல் கர்ம வாஸனை அதை நாலா தினுஸில் பிய்த்துப் பிடுங்கலாம். ஆனால் அந்த ஸமயத்தில், சுற்றியிருப்பவர்கள் பகவந்நாமாவைச் சொல்லிக் கொண்டிருந்தால், சட்டென்று அது ஒரு லகான் போட்டு, அநதச் சாகிற ஜீவனின் நினைப்பை பகவானிடம் திரும்பும்படிப் பண்ணலாம். 

No comments:

Post a Comment