Wednesday 27 February 2013

பிள்ளையார் சுழி ஏன் போடுகிறோம்?



பிள்ளையார் சுழி ஏன் போடுகிறோம்? விஞ்ஞானபூர்வ தத்துவமும் இதில் அடங்கி இருக்கிறது...!!! - மஹா பெரியவர் ஸ்ரீ ஸந்த்ரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் 

எந்தக் காரியத்துக்குமே முதலில் கணபதிப் பிரஸாதத்தைப் பிரார்த்திக்க வேண்டுமென்றாலும், இந்த எழுத்து வேலையில் மட்டும் அவருக்கு எதனால் தனி முக்யத்துவம் என்று யோசித்துப் பார்த்தேன். இங்கே முதலில் ஸரஸ்வதியைச் சொல்லாமல் பிள்ளையாரை ஏன் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். .

எதை எழுத ஆரம்பித்தாலும் முதலிலே பிள்ளையார் சுழி போட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். பெரிய காவியமாகத்தான் இருக்கவேணும் என்றில்லை; ஒரு போஸ்ட் கார்டானாலும் ஸரி, கடை ஸாமான் லிஸ்டானாலும் ஸரி, முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறோம். எழுதுவது மட்டுமில்லாமல் எந்தக் காரியமானாலும் ஆரம்பிக்கிற போது அது விக்நமில்லாமல் பூர்த்தியாவதற்கு மஹாகணபதியைக் கொண்டு வந்துதான் ஆகணும். அவரைக் ஸ்மரிக்காமல் எந்தக் காரியமுமே இல்லையானாலும், இந்த எழுத்துக் காரியத்தில் அவரை ஸ்மரிக்கிறோம் என்பது Written proof -ஆகவே (எழுத்து மூல நிரூபணமாகவே) பிள்ளையார் சுழியில் தெரிகிறது.

பின்னாடி நாம் எழுதுகிற விஷயம் 'சுழித்து'ப் போகாமலிருப்பதற்காக முன்னாடி பிள்ளையார் சுழி போட்டு விடுகிறோம்.

பிள்ளையார் சுழி போடாமல் 'ஓம்' போடுகிறவர்களும் கிரந்தம், தமிழ் இரண்டிலுமே அந்த ஓமுக்கும் சுழித்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லை, இந்த ப்ரணவ ஸ்வரூபமும் பிள்ளையார்தானே?

சுழி என்பது வளைசல்; 'வக்ரம்' என்பார்கள். பிள்ளையாரின் தும்பிக்கை நுனி வளைந்து சுருட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் 'வக்ரதுண்டர்'என்றே அவருக்கு ஒரு பேர். பிள்ளையார் சுழி போடுவதில் பாதியாக இருக்கிற வளைசல் பூர்ணமாகிவிட்டால் முழு வட்டம். பூலோகமும், பல லோகங்களும், நக்ஷத்ர மண்டலங்கள் அடங்கியுள்ள பிரம்மாண்டமும் எல்லாமே வட்டமானவைதான். 'அண்டம்'என்றாலே முட்டை என்றுதான் அர்த்தம். முட்டை வட்ட வடிவந்தானே?

இந்தப் பூர்ணரூபத்தையே ஸைஃபருக்கும் சொல்வதுதான் ஆச்சரியம்! 'பரீக்ஷையில் கோழி முட்டை' என்கிறோம். 'பூர்ணமும் பிள்ளையார்தான், சூன்யமும் பிள்ளையார்தான் உள்ளது அல்லது எல்லாம் பரமாத்மாதான்' என்கிற மஹா தத்துவத்தையே சுழி காட்டுகிறது. காரியத்தை ஸஃபைர் பண்ணிக்கொண்டு வருகிறவனை, ''என்னடா சுழி!'' என்று ப்ரக்ருதத்திலும் (நடைமுறையிலும்) சொல்கிறோம். கையிலிருக்கிற மோதகத்தில் தித்திப்புப் பூர்ணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய பூர்ணத்வத்தை 'டெமான்ஸ்ட்ரேட்' பண்ணும் பிள்ளையாருக்கே சுழி போடுகிறோம். இந்தச் சுழி மற்றச் சுழியையெல்லாம் முழுசாகப் பண்ணிவிடுவது.

வளைசலான கொம்போடு ஆரம்பிக்கிற பிள்ளையார் சுழி, கொஞ்சம்கூட வளையாத நேர்கோட்டோடு முடிகிறது. பிள்ளையார் பூர்ணம், சூன்யம் இரண்மாக ஆனாற்போலவே வக்ரமானதும் அவர்தான், ஆர்ஜவமானதும் (நேரானதும்) அவர்தான் என்பது தாத்பரியம். வக்ர குணத்துக்கு நேரெதிரானதை ஆர்ஜவம் என்பார்கள். தமிழில் இதைத்தான் நேர்மை என்பது. இங்கிலீஷிலும் straightness, straight- forward என்கிறார்கள். குணம் குணஹீனம் எல்லாம் ஒரே நிர்குண பரமாத்மாவின் வேஷங்கள்தான்.

'உ' என்பது ப்ரணவத்தின் இரண்டாவதான நடு அக்ஷரம். அ-உ-ம என்ற மூன்றும் சேர்ந்தே 'ஓம்'காரமான ப்ரணவம். விஷயம் தெரிந்தவர்கள் இதை இங்கிலீஷில் Om என்று எழுதாமல் Aum என்றே எழுதுவார்கள். 'அ'என்பது ஸ்ருஷ்டி; பிரம்மா. உ என்பது பரிபாலனம்; விஷ்ணு. ம ஸம்ஹாரம்; ஈஸ்வரன். த்ரிமூர்த்திகளும் தோன்றியது ஏக பராசக்தியால்தான். அதனால் அவள் ப்ரணவ ஸ்வரூபிணி. ஆனாலும் ஓமை தேவீ ப்ரணவம் என்று சொல்வதில்லை. 'உமா' என்பதே தேவீ ப்ரணவம் என்பார்கள். அ-உ-ம என்ற சப்தங்களே மாறி 'உமா' வில் உ-ம-அ எனற இருக்கின்றன அல்லவா? ஓமில் ஸ்ருஷ்டி பீஜமான 'அ' முதல் எழத்தாயிருக்க, 'உமா' விலோ ஸ்திதி (பரிபாலன) பீஜமான 'உ'என்பது முதல் எழுத்தாயிருப்பதால்தான், அன்போடு ரக்ஷித்து, காத்து, பரிபாலனம் பண்ணும் அம்பாளின் ப்ரணவம் 'உ' வில்தான் ஆரம்பிக்க வேண்டுமென்று காரணம் சொல்லி, இதனாலேயே 'உமா'என்பதை அம்பாளுடைய ப்ரணவமாகக் கூறுகிறார்கள்.

அ-உ-மவில் ஹ்ருதயம் மாதிரி நடுவேயிருப்பது 'உ'அதுவே கருணாமயமாகக் காப்பாற்றுகிற தேவீ ப்ரணவத்தில் ப்ரதம ஸ்தானத்திலிருக்கிறது. ப்ரணவ ஸ்வரூபப் பிள்ளையார் 'அ'வும் 'ம'வும் சேராமல் இந்த 'உ'காரமாக மட்டுமே பிள்ளையார் சுழியில் இருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. அதாவது அவர் ''தாயைப் போலப் பிள்ளை''மட்டுமில்லை;தாயாருக்கும் ஒரு படி மேலே என்று தோன்றுகிறது. எப்படி? அவளும் ரக்ஷிக்கிற 'உ'வுக்குப் பின்னாடியாவது ஸம்ஹார 'ம' ஸ்ருஷ்டி 'அ' இவற்றையும் வைத்தக் கொண்டிருக்கிறாள். ஆனால் பிள்ளையோ எப்போது பார்த்தாலும் எல்லாரையும் ரக்ஷிப்பது தவிர வேறு ஜோலியே வைத்துக்கொள்ளாத பூர்ண கருணாமூர்த்தியாக இருந்துகொண்டு 'உ'ஒன்றோடேயே நின்றுவிடுகிறார்.

ப்ரணவத்தில் 'உ' விஷ்ணுவின் ரூபம். உமாவும் விஷ்ணு ரூபிணியாக, நாராயண ஸஹோதரியாக, 'விஷ்ணு மாயா விலாஸினி'யாக, 'நாராயணி'என்றே பெயர் படைத்தவளாயிருக்கிறாள்.பிள்ளையாரைப்பற்றி ஸகலரும், ஸகல கார்ய ஆரம்பத்திலும் சொல்லும் ஸ்லோகத்திலும் ''சுக்லாம்பரதரம் விஷ்ணும்''என்றே வருகிறது. (இங்கே விஷ்ணு என்றால் ஸர்வ வியாபகமானவர் என்று அர்த்தம்) 'உ'என்பது சிவ-சக்தி புத்ரனை விஷ்ணுவோடும் ஸம்பந்தப்படுத்தி, சைவ வைஷ்ணவத்தை ஸமரஸம் பண்ணி விடுகிறது!

வளைசலும் நேர்கோடுமாக இருக்கிற பிள்ளையார் சுழியில் நிறையத் தத்வார்த்தம் இருக்கிறது. சக்ராகாரமாக எந்த ஒன்று சுற்றினாலும் அதற்கு மத்தியில் அதற்கு ஆதாரமாக, அச்சாக ( axis- ஆக) நேரான ( straight- ஆன) ஒன்று இருந்தாக வேண்டும். விஷ்ணு தன் விரலையே நேராக நிமிர்த்திக்கொண்டு அதிலேதான் சக்ராயுதத்தைக் கோத்துக் கொண்டு சுற்றுகிறதாகவே விக்ரஹங்களில் காட்டியிருக்கும். சுற்றச் சுற்றப் பொறிப் பொறியாகக் கொட்டுகிற கார்த்திகை வாணமானாலும் ஸரி (இது ஒளி) - விரலிலே மாட்டிக்கொண்டு சுற்றிச் சுற்றி டபடபவென்று அடிக்கிற கிரிச்சட்டியானாலும் ஸரி (இது ஒலி) - இதுகளின் வட்டமான சுழற்சிகளுக்கு ஆதாரமாகக் கையோ, குச்சியோ எதுவோ ஒன்று நேர்கோடாக இருக்க வேண்டியிருக்கிறது. யுனிவர்ஸில் லோகங்களெல்லாம் ஸர்குலராகத்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்கிறபோது இவற்றுக்கும்கூட straight line -ஆக ஒரு ஆதார axis நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் energy (சக்தி) ரூபத்தில் இருக்கத்தான் வேண்டும். வட்டமாகச் சுற்றுகிற ஸகலப் பிரபஞ்சத்தையும் அதற்கு ஆதார சக்தியான கோட்டையும் சேர்த்துத்தான் பிள்ளையார் சுழியில் வட்டமாகவும் நேர்கோட்டு பாகமாகவும் போடுகிறோம்.

எங்கேயோ படித்த, அல்லது கேட்ட, ஞாபகம், எனர்ஜி உண்டாகிறதே பிள்ளையார் சுழி ரூபத்தில்தான் என்று. தாரை கொட்டி அதிலிருந்து எலெக்ட்ரிஸிடி எடுக்கிறபோது ரொடேஷனிலிருந்து (வட்டத்திலிருந்து) நேர்கோடாகத்தான் மின்ஸாரம் புறப்படுகிறதென்று எடுத்துக்காட்டியிருந்தது. பிள்ளையார் சுழியில் கொம்பு தான் ரொடேஷன்;கோடு அதிலிருந்து சக்தி உத்பவம். இந்த இரண்டையும் சிவ-சக்தி ஸ்வரூபமான நாத-பிந்துக்களாகக்கூடச் சொல்லிக்கொண்டு போகலாம். அதெல்லாம் ஸூக்ஷ்மமான விஷயம்.

ஆரம்பித்த இடத்துக்கே வந்து முடிந்துவிடுகிற வட்டம் ஏகமான பிரம்மத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். வட்டத்தில் ஆரம்பித்து அரை வட்டத்துக்கு அப்புறம் நேர்கோடாகிற பிள்ளையார் சுழி, ஏகமான பிரம்மத்தை ஸங்கேதமாகக் காட்டிவிட்டு அதிலிருந்து அநேகமான ஸ்ருஷ்டி தோன்றினதையும் சேர்த்துத் தெரிவிக்கிறது என்று சொல்லலாம். பிரம்மமும் பூர்ணம். பிரபஞ்சமும் பூர்ணம். பிரம்ம பூர்ணத்திலிருந்து பிரபஞ்ச பூர்ணம் உண்டாயிற்று என்று உபநிஷத்தில் சாந்தி மந்திரம் சொல்கிறோம். ஆரம்ப ஸ்வாமியின் அடையாளமாக எதன் ஆரம்பத்திலும் போடும் பிள்ளையார் சுழி, பிரம்ம பூர்ணத்தை வளைசல் கொம்பாலும், பிரபஞ்ச பூர்ணத்தை நேர் கோட்டாலும் காட்டி, முதலில் கொம்பு அப்புறம் கோடு என்பதால் பிரம்மத்திலிருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சு என்றும் தெரிவிக்கிறது.

கொம்பு, கோடு என்று இரண்டு வார்த்தைகள் சொன்னேன். வேடிக்கையாக இரண்டுமே பிள்ளையாரின் தந்தத்துக்குப் பேராயிருக்கின்றன. 'ஏக தந்தர்' என்பதை 'ஒற்றைக் கொம்பன்' என்பார்கள். ''பெரும்பாரக்கோடும்'', ''கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே'' என்றெல்லாம் அவ்வைப் பாட்டி சொல்லும்போது 'கோடு' என்றாலும் தந்தந்தான். எப்பொழுதும் குழந்தையாயிருக்கிற ஸ்வாமியை வேண்டிக்கொண்டதாலேயே குழந்தைப் பிராயத்தில் கிழவியாகிவிட்ட அவ்வை சொன்ன 'கொடுவினை'என்பதுதான் ஜன்மாந்தர பாபங்களான பிராரப்த கர்மா. அந்தக் கர்மா எப்படியெப்படி நம்மைப் பழிவாங்க வேண்டும் என்று பிரம்மா நம் தலையில் எழுதியிருக்கிறாரென்று, சொல்லி, இதை பிரம்மலிபி என்பார்கள். 'தலைச்சுழி'என்பதும் இதைத்தான். இந்த தலைச் சுழியையும் கழித்து விடுவது பிள்ளையார் சுழி. ''கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே!''

நாம் போடுகிற பிள்ளையார் சுழி ஒரு சின்ன எழுத்தின் மூலம் விக்நேஸ்வரரை ஸங்கேதமாகத்தான் காட்டுகிறது; வெளிப்படையாகப் பிள்ளையார் பேரைத் தெரிவிக்கவில்லை. ஆனால் பழங்காலச் சுவடிகளைப் பார்த்தால் அவற்றின் ஆரம்பத்தில் வெளிப்படையாகவே '' ஸ்ரீ கணாதிபதயேநம : '' என்று போட்டிருக்கும்.

அவரைச் சொல்லும்போதும் விநாயகர், விக்னேஸ்வரர், வக்ரதுண்டர், ஹேரம்பர் முதலான மற்ற எந்தப் பெயரையும் போடாமல் "கணாதிபதி" என்றே எந்தச் சுவடியிலும் போட்டிருப்பது ஏன் என்று யோசித்தேன். வித்வான்களுடன் டிஸ்கஸ் பண்ணினதில் ஒரு மாதிரி புரிந்தது. கண என்ற வார்த்தைக்கு உள்ளே அநேக அர்த்தங்களில் பாஷா ஸம்பந்தமாகவே ஒன்று இருக்கிறது. ஒரே வித்க்குக் கீழே வருகிற எல்லா தாதுக்கள் அல்லது வார்த்தைகளை ஒரு கணம் என்று தொகுத்து வியாகரணத்தில் கொடுத்திருக்கிறது. இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதிதான் கணாதிபதி. பரமேஸ்வரனுடைய பூத கணங்களுக்குத் தலைவரானதால் கணபதி, கணாதிபதி, கணேசர், கணநாதர் என்றெல்லாம் அவருக்குப் பெயர் இருப்பதோடு, பத ஸமூஹங்களுக்கெல்லாம் தலைவர் என்ற அர்த்தத்திலும் இப்படிப் பெயர் பெற்றிருப்பதால்தான் கணாதிபதயே நம : என்று போட்டு எழுத ஆரம்பித்துருக்கிறார்கள்.

விநாயகர் ப்ரணவ ஸ்வரூபம் என்றால், அந்த ப்ரணவம்தானே ஸகல சப்தங்களுக்கும் வார்த்தைகளுக்கும் ஆதாரம்? அதனால் அவரைப் பத ஸமூஹங்களின் அதிபதியாகக் கொண்டு, எழுத ஆரம்பிக்கும்போது முதலில் நமஸ்காரம் தெரிவிப்பது பொருத்தந்தான்.

இன்னொரு காரணங்கூடச் சொல்லலாம். அவரே பெரிய 'எழுத்தாள'ராக இருந்திருக்கிறார்! லோகத்திலேயே பெரிய புஸ்தகம் எது என்றால் மஹாபாரதம்தான் என்று எவரும் சொல்வீர்கள். யாராவது ஏதாவது நீட்டி முழக்கினால், ''அந்த மஹாபாரதமெல்லாம் வேண்டாம்'' என்கிறோம். லக்ஷம் கிரந்தம் கொண்டது பாரதம். பஞ்சமோ வேத :, ஐந்தாவது வேதம், என்று அதற்குப் பெயர். மற்ற நாலு வேதங்கள் 'எழுதாக்கிளவி'- எழுத்தில் எழுதப்படாமல் காதால் கேட்டு மனப்பாடம் பண்ணியே ரக்ஷிக்கப்பட வேண்டியவை. ஐந்தாவது வேதமான பாரதம் தான் எழுதி வைக்கப்பட்டது. வேத வியாஸ பகவான் சொல்லச் சொல்ல அதை ஸாக்ஷாத் மஹாகணபதிதான் மேரு சிகரத்திலே எழுதினார். இங்கிலீஷில் Writer என்றால் Original author , அதை எழுதிய Copyist என்று இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. அதனால் பிள்ளையாரை Writer என்று சொல்லலாம்!

அவர் எழுத்தாளராயில்லாமல் எழுத்தராக மட்டுமிருந்தாலும்கூடச் சுவடிகளில், முதல் நமஸ்காரம் பெற 'க்வாலிஃபை' ஆனவர்தான். எப்படியென்றால், இந்தச் சுவடிகளை எழுதினவர்களும் ஒரிஜனல் ஆசிரியர்களில்லை. பழையகாலத்தில் க்ரந்தகர்த்தா ஒருவராகவும், அதை அவர் சொல்லச் சொல்ல எழுதுகிறவர் இன்னொருத்தராகவும் இருப்பார்கள். அப்போது ரொம்பப் படித்தவர்கள்கூட எழுதத் தெரிந்துகொண்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. Calligraphist என்கிறது போல, அழகாக எழுதுவதற்கென்றே 'கணக்கர்'கள் என்று தனியாகச் சிலர் இருந்தார்கள். அந்த நாளில் எத்தனை பெரிய சாஸ்திரமானாலும் வித்யார்த்திகள் படித்தும் எழுதியும் அப்யஸிப்பது என்று இல்லை. குரு வாயினால் சொல்கிறதை சிஷ்யன் காதால் கேட்டுத் திரும்பத் திரும்ப வாயால் தானும் சொல்லிச் சொல்லி, நெட்டுருப் போட்டு, எல்லாவற்றையும் மனப்பாடமாகவே கற்றுக்கொண்டான். ஆனாலும் ஒரு காப்பாகச் சுவடி எழுதுவதற்கென்றே இருந்தவர்களைக் கொண்டு ஏட்டிலும் எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கணக்கர்கள் பாரதத்தை எழுதிவைத்த கணாதிபதியையே தங்களுக்கு முதல்வராக நினைத்து முதல் நமஸ்காரம் தெரிவித்தது நியாயந்தான்.

தன் தந்தத்தையே உடைத்து அதை எழுத்தாணியாக வைத்துக் கொண்டு எழுதினார். யானையின் பெருமைக்கு முக்ய காரணமே தந்தந்தான். ''இறந்தாலும் ஆயிரம் பொன்''என்பது தந்த மதிப்பை வைத்துத்தான். அப்படிப்பட்ட தந்தத்தை லோகத்தில் தர்மநூல் தெரியணும், பரவணும் என்பதற்காக முறித்துப் பரம கருணையோடு விக்னேஸ்வரர் எழுதி வைத்தார். ப்ரணவ ஸ்வரூபமாகவும், தெய்வங்களில் அக்ரஸ்தானம் வஹிப்பவராகவும், ஸாக்ஷ£த் பார்வதி-பரமேஸ்வராளின் ஜ்யேஷ்ட குமாரராகவும் இருக்கப்பட்ட மஹா கணபதி, தர்மப் பிரசாரம் பண்ணணும் என்பதற்காக வியாஸருக்குக் குமாஸ்தாவாக, Scribe- ஆகத் தம்மைக் குறைத்துக்கொண்டு பாரதத்தை எழுதினார்.

நடராஜாவே மாணிக்கவாசகர் பாடப்பாட எழுதினார். கிருஷ்ண பரமாத்மாவும் 'கீத கோவிந்த'த்தில் (அதன் ஆசிரியரான) ஜயதேவரின் வேஷத்தில் வந்து ஒரு அடி எழுதினதாகக் கதை இருக்கிறது. ஆனால் அலுக்காமல் சலிக்காமல் லக்ஷம் ஸ்லோகம் எழுதின ஸ்வாமி பிள்ளையார்தான்.

இதனால் ''ஸ்ரீ கணாதிபதயே நம:'' என்று அவருக்குக் கும்பிடு போட்டுவிட்டு எழுதுகிற எவருக்கும் நிறுத்தாமல், தங்குதடையில்லாமல் எழுதும் சக்தி வந்துவிடும்.

இவர் எழுதுகிற வேகத்துக்கு ஈடு கொடுத்து Compose பண்ண முடியாமல்தான் வியாஸர் 'பாரத குட்டு'என்கிற அநேக சிக்கலான ஸ்லோகங்களை அங்கங்கே சொல்லி, இவரைக் கொஞ்சம் யோசனையில் நிறுத்தப் பண்ணி, அதற்குள் ஸுதாரித்துக்கொண்டு மேலே சொல்ல ஆரம்பித்தார். நாம் பிள்ளையார் குட்டு (Kuttu) குட்டிக் கொள்கிறோம் என்றால் வியாஸரோ பிள்ளையாருக்கு பாரதத்தில் குட்டு (guttu) வைத்தார். கன்னட பாஷையில் குட்டு என்றால் ரஹஸ்யம், மர்மமான புதிர். அநேக கன்னட வார்த்தைகளைத் தமிழ் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தமிழில் கூட ''குட்டு உடைஞ்சுப் போச்சு''என்கிறோம்.

பிள்ளையாருக்கே கொஞ்சம் புதிராக வியாஸர் பண்ணின ஸ்லோகங்களுக்குத்தான் ''பாரத குட்டு''என்று பேர். ஆனாலும் அவர் ஞான ஸ்வரூபமானதால் அடுத்த க்ஷணமே அவருக்கு ''குட்டு உடைஞ்சுடும்!'' மறுபடி எழுத ஆரம்பித்துவிடுவார்*. அப்படிப்பட்டவரை ஸ்மரித்து விட்டு எழுதத் தொடங்கினால், எந்தச் சிக்கலான விஷயமும் நொடியில் தெளிவாகி, மேற்கொண்டு எழுதிக் கொண்டு போக முடியும் என்ற நம்பிக்கை 'ஸ்ரீ கணாதிபதயே நம:' என்று ஆரம்பித்தால் உண்டாகும். ​பிள்ளையார் சுழியும் இதை மனிதில் கொண்டே, ஆரம்பத்தில் போடும் வழக்கம் ஏற்பட்டது.