Monday 20 June 2011

பெரியவாளின் அம்மா வீட்டில் எதிரொலிக்குது வேத கோஷம் ..!!!


ஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது!ஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும், 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு, சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்து, சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல், தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை!

ஒருநாள்… காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோது, பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு!
காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி, அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.
ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில், நீராடிய சுவாமிகள், அந்தணர்களுக்குத் தானம் அளித்து, தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
பெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. ‘ஈச்சங்குடியில் உள்ள, அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில், எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்’ என விரும்பினார் பெரியவாள்.
காலங்கள் ஓடின. 93-ஆம் வருடம்காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி, பெங்களூருவில் இருந்து, அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.
அவரிடம் பெரியவா, ”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே! நல்லது, பண்ணு!” எனச் சொன்னதும், நெகிழ்ந்துவிட்டார் அவர்.
அந்தக் கோயில் குறித்தும், ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும், ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா, சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும், அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.
என்ன நினைத்தாரோ… சட்டென்று அன்பரிடம்”ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?” என்றவர், ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும், அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி, ”இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்” என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி, ”இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’ என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.
பிறகென்ன… அந்த வீடு, விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில், குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம், 8.1.94. அதாவது, தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம், அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்?!
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல், ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். ”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை, அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை, மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு, பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில், அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால், நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி, வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்!
அருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்று, அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால், ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

Thursday 2 June 2011

அமரசிம்மனின் அழியாப்புகழ் பெற்ற அகராதி "அமரகோசம்"


அமரசிம்மனின் அமரகோசம் - அழியாப் புகழ் பெற்ற அகராதி 
ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு "அமரகோசம் " என்று பெயர்.` கோசம் ' என்றால் `பொக்கிஷம் ' என்று அர்த்தம். சப்தக்கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் `கோசம் ' என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும், ரொம்பவும் பிரசித்தமானது `அமரகோசம் ' தான். அமரர்  என்கிற பெயர் இதை இயற்றியவனின் பெயரை வைத்தே அதற்கு `அமரம் ' என்று பெயர் வந்ததே ஒழிய, ஸம்ஸ்கிருதத்தை தேவ பாஷை என்பார்கள்., தேவர்கள் அமிர்தம் உண்பதால், அமரர் என்பார்கள்.,  எனவே தேவ பாஷை அமரபாஷை என்றும் சொல்லப்படுவதாலோ, அதற்கேற்றாற்போல் ம்ஸ்கிருதம் செத்த பாஷை (dead language)  என்று சொல்லிக்கொண்டு, அதை சாகடிக்க எத்தனையோ யத்தனம் செய்தாலும், எப்படியோ அதுவும் அமரமாக இருந்துகொண்டேதான் இருக்கிறது...அதனால் அமர பாஷையில் உள்ள கோசம்தான் அமர கோசம் என்றோ கொள்ளக்கூடாது.

ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம். இலக்கியத்தில் அவர்களுக்கு விசேஷமான இடம் உண்டு. தமிழில் ஐம்பெரும் காப்பியங்களில் ஜைனசம்மந்தம் அதிகம். காவிய ரசம் நிரம்பி மிக உயர்ந்த நூல்களாக உள்ள சிந்தாமணி, வளையாபதி எல்லாம் ஜைன நூல்கள்தாம்.  ஸம்ஸ்கிருதத்தில், 'பஞ்ச காவியங்கள் ' என்று பொதுவாக இருப்பதைத்தவிர ஜைனர்களே தனியாக தங்கள் மத சம்மந்தமான ஒரு பஞ்ச காவியம் வைத்திருக்கிறார்கள். 

அமர சிம்மன் என்ற மகா புத்திமானும் ஒரு ஜைனந்தான். அவனும் பல நூல்கள் எழுதினான். ஆனால், இன்று மிஞ்சி இருப்பது மதநூலாக இல்லாத இவனது நிகண்டு என்ற அகராதி ஒன்றுதான் என்றால் ஆச்சரியமாயிருக்கும். இவனது இந்த நிகண்டுவைப் பார்த்தால், அறிவில் இவனுக்கு ஈடு உண்டா என்ற பிரமிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். இவனது இந்த நிகண்டு ஒன்றாவது மிஞ்சியதற்கு காரணம் ஜைனர்கள் பரம விரோதியாக நினைத்த நம் ஆதி சங்கரர்தான். 

ஆதிசங்கரர் பாரத தேசம் முழுவதும் சஞ்சாரம் பண்ணி, பல மதங்களைக் கண்டனம் செய்து, வைதிக மதத்தை ஸ்தாபிக்க செய்ய செய்த திக்விஜயத்தின் போது, அமர சிம்மனையும் சந்தித்தார்.  

பகவத்பாதரின் கொள்கை, ஒரே ஒரு சத்தியம்தான் இருக்கிறது! அதுவே பலவிதமாகத் தெரிகிறது. அந்த ஒன்றிலேயே கரைந்து அதுவாகவே ஆகிவிட வேண்டும் என்பது.

பௌத்தர்கள் பொதுவாக எல்லாமே சூனியம், மாயை என்பார்கள். 

ஆதி ஆச்சாரியாலும் ` மாயையால்தான் ஒரே பரம்பொருள் பலவாகத் தெரிகிறது, இந்தப் பார்வை போனால் இது அத்தனையும் போய் விடும் '  என்று சூனிய நிலையையே சொல்கிறமாதிரித் தோன்றினாலும், அவர் முக்கியமாகச் சொல்வது, `இல்லாத (சூனிய ) மாயை ' அல்ல; `இது போனபின் எப்போதும் நிலைத்து இருக்கிற, அழிவே இல்லாத பூரணமாக ஒரே சத்தியம் இருக்கிறது ' என்பதைத்தான் நம் ஆச்சாரியாள் முடிந்த நிலையாக அவலம்பித்தார்.(நிலை நாட்டினர்)  

பௌத்தம் சூனியத்தோடு நிற்கிறது.

பூரணமாக ஒன்று இருக்கிறது என்பது ஆச்சாரியாளுக்கு முக்கியம். ஒன்று இருக்கவும் இருக்கலாம் (அஸ்தி); இல்லாமலும் இருக்கலாம் (நாஸ்தி); இருந்தும் இல்லாமலும் இருக்கலாம் (அஸ்தி நாஸ்தி) என்பது ஜைன மத ஸ்தாபகரான ஜைனருக்கு ( மகாவீரருக்கு) முக்கியம்.

இப்படிப்பட்ட கொள்கையை உடைய ஜைனனான அமரசிம்மன் ஆச்சரியாளிடம் வாதப் போருக்கு வரும்போது, "நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம்  கேள்விக்குப் பதில் சொல்வேன்" என்றான். 

ஆசாரியாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக்கொண்டார்.          
                                           File:Divine encounters jain.jpg

ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்கும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.

அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக்கொண்டு அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆச்சார்யாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார் . 

அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான். அவன் என்னதான் மகாபுத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்பது ஆச்சார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  க்ஷணகாலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும் சர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது. 

அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமரசிம்மனே இல்லை.  ஸாக்ஷாத் ஸரஸ்வதி தேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான். நியாயமாகப் பார்த்தால் இவன் அப்படிச் செய்திருக்கவே கூடாது. ஏனென்றால் இவனுடைய ஜைனமதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை. அதை பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில் ஆராதிப்பதை ஜைன தத்வம் ஒப்புக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தும் இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான். உள்ளொன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான். 

இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக  கொள்கிறவர்களில் ரொம்பப்பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கட்ரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்; மாரியம்மனுக்கும் பிராத்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்; சம்சாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுத்தேன்" என்று ஜம்பமாகச் சொல்லிகொள்வார்கள்.

இந்த ரீதியில்தான், ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத்தைக கண்டனம் பண்ணும் கிரந்த்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய வேண்டும் என்று ஹிந்து மதத்தின் வாக்கு தேவதையையே உபானை செய்தான்.                                                                                              
                                                                                                                                          
ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கிவிட்டான் என்றால், அதற்குண்டான ஒரு பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே அமரசிம்மனின் உபானையின் சிரத்தையை மதித்து, இவனுக்கும் ரஸ்வதி அநுக்கிரகம் செய்து விட்டாள்.  


இப்போது இவன் திரைக்கு இந்தப்புறம் ரஸ்வதிதேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான்.  தான் எத்தனை புத்திசாலியானாலும் ஆசாரியாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவர்த்தி மாதிரி ஆகிவிடிவோம் என்பது இவனுக்கு தெரியும். அதனால் முன்னமேயே வாக்குதேவியைத் தஞ்சம் புகுந்திருந்தான்.  இவனுடைய உபானைக்கு இன்னும் கொஞ்சகாலம் பலன் தந்துதான் ஆக வேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டுருந்தாள். எனவே, "என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரை போட்டுக்கொண்டு, நீ அதற்குள் இரு. சங்கரர் வெளியிளிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்" என்று வாக்கு தந்தாள் வாக்குதேவி. 

அப்படித்தான் இப்போது நடந்தது.  அதை ஆசார்யாளும் துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்துவிட்டார். 


உடனே அவர், `அம்மா, உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே நீ இப்படி அநுக்கிரகம் செய்யலாமா? அவனுடைய உபானா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே ! அவனுக்குச் செய்ய வேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா? என்று ரஸ்வதியைக் கேட்டார்.

அவருடைய கணக்கும் சரியாகத்தான் இருந்தது.  அமரசிம்மனுடைய உபானைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ரஸ்வதி தெரிந்து கொண்டாள்.

உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகிவிட்டாள். திரை அறுந்து விழுந்தது. 

அப்புறம் அமரசிம்மனால் ஆசார்யாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டான்.

ரஸ்-அதாவது நீர் நிலையில்-இருக்கிறவள் ரஸ்வதி. அறிவுதான் அந்த நீர்நிலை. அது கொஞ்சம் கூடக் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதற்குள் அவள் இருக்க முடியும். ஆனால், ஆசார்யாள் அவதரித்த காலத்தில் எப்படியிருந்தது? 

ஏகப்பட்ட மதங்கள்-எழுபத்திரண்டு என்று சொல்வார்கள்-விதண்டாவாதங்களைச் சொல்லிக்கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸானது ஒரே சேற்றுக்குட்டை மாதிரி ஆகிவிட்டது. அப்போது அத்வைத உபதேசத்தால், ஆசார்யால்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடியோடு வாரி அப்புறப்படுத்தி, ரஸைத் தெளிய வைத்து, ரஸ்வதியை நிஜமான ரஸ்வதியாக்கினார் என்று `வக்தாரம் ஆஸாத்ய '  இப்படி ஒரு ஸ்லோகம் போகிறது...!!!

இம்மாதிரி ரஸ்வதியை ரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ரஸ்வதியை அப்புறப்படுத்தும்படியாயிற்று. பிறகு, அவர் ரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கும் தாமும் அநுக்கிரகத்தைச செய்தார். அதுவே 'அமரகோச'த்தின் கதையும் ஆகும். 

ஆசார்யாளிடம் தோல்வியை ஒப்புக்கொண்ட அமரசிம்மன், அவனுக்குத் தான் எழுதிய புஸ்தகங்கள் (சுவடிகள்) ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்க வேண்டும் என்ற என்ணம் வந்தது. 

அத்வைத பரமாக ஆச்சார்யாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்மந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன சித்தாந்தம் தோற்றுப்போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்கள் மற்றவர்களுக்காக விட்டுவைப்பது  சரியாகாது என்று நினைத்தான்.

எந்த மதஸ்தரானாலும் நேர்மை, சத்தியம் உள்ளவர்கள் எதிலும் இருப்பார்கள். ஜைனர்களுக்கு சத்தியம், நேர்மை மிகவும் அதிகம். அவர்கள் ஞானச்சம்மந்தமூர்த்தி ஸ்வாமிகளுடன் வாதத்துக்கு வந்தபோது, தாங்களாகவே, "நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துபோவோம்" என்றார்கள். அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றில் அவரிடம் தோற்றுப்போனார்கள். ஆனால், கருணை மிகுந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அவர்களை கழுவேற நினைக்கவில்லை.  ஆனாலும், அவர்களாகவே பிடிவாதமாக, "நாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு, கழுவேறினார்கள். 

ஞானசம்பந்தர் சமணர்களை இரக்கமில்லாமல் தண்டித்ததாக சிலர் நினைப்பது தப்பு. இவர் வாதத்தில் ஜெயித்து, அதனால் பாண்டிராஜா இவர் பக்கம் சேர்ந்து, எதிராளிகளுக்கு எந்த சிட்சை தரவும் இவருக்கு அதிகாரம் தந்தும்கூட, அவர் ஜைனர்களை மன்னித்ததே அவருடைய பெருமை. அப்படியும் வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமை.


எதற்காக இவை சொல்லப்பட்டது, என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமரசிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. 

எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று, எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான்.

இதை ஆச்சார்யாள் கேள்விபட்டதும் துளிக்கூ சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார்.

"அடடா., என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? லோகம் என்று ஒன்று இருந்தால், நானாதினுசான அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்ராயங்ககள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும்.எதிர்க்கட்சி என்று ஒன்று இருந்தால்தான், நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ளமுடியும். 

நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்துவிட்டுப்போ. ஆனாலும், நீ மகா புத்திமான் என்று உன்னை நான் கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்துச் சொல்ல முடியுமோ அத்தனை நன்றாகச்செய்து சுவடுகளை எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; 

உன் புத்தியளவில், நீ சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிறாயோ அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா? என்று ஆசார்யாள் அமரசிம்மனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து, அவன் கடைசியாக அக்னியில் போட இருந்த சுவடியை போடாமல் தடுத்தார். 



அப்போது அவன் கையில் இருந்ததுதான் 'அமரகோசம்'. ஆச்சார்யாள் தடுத்திருக்காவிட்டால், அதுவும் "ஸ்வாஹா"வாகியிருக்கும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக, சமய சம்மந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயேபோய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆச்சார்யாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்' என்ற பெயருக்கு ஏற்றபடி அதை மட்டும் அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார். 


அகராதியில் அதை எழுதியவன் தன்னுடைய சித்தாந்தம்(சுய கருத்துக்கள்)
முதலான சொந்தக் கொள்கைக்கும் பட்சபாதம் காட்டக்கூடாது. பிற மதங்களைச் சேர்ந்த வார்த்தைகளானலும், இங்கே அகராதியில், அவற்றை விட்டுவிடாமல், ஆட்சேபிக்காமல்,, அவற்றுக்கு அந்தந்த மதஸ்தர்கள் என்ன அர்த்தம், என்ன பெருமை நினைக்கிறார்களோ அதைத்தான் கொடுக்க வேண்டும். வேண்டுமானால், 'இப்படி இன்னாருடைய நம்பிக்கை' (belief) என்று பட்டும் படாமலும் சேர்க்கலாமே தவிர, கண்டனம் ஒன்றும் பண்ணக்கூடாது. எல்லாவார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்கத்தான் வேண்டும்.---அது எந்தக் கட்சியாரின் கொள்கை என்று பார்ப்பது அகராதிக்காரனின் வேலை இல்லை. 

இந்த நியாயத்துக்கு கட்டுப்பட்டுத்தான் அமரசிம்மன் ஜைனனாக இருந்தபோதே இந்த 'அமரகோச'த்தை எழுதியிருக்கிறான். இன்றைக்கும் சகல மஸ்கிருத மாணவர்களும் நெட்டுருப் போடுகிறமாதிரி, பொது நோக்கோடு எழுதியிருக்கிறான். 

'அகராதியையா? நெட்டுருவா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி நெட்டுருப் போடுவது? என்று தோன்றும். ஆனால், அமரகோசம் அழகான சுலபமான சுலோகங்களாக, காவியம் மாதிரி, ஸ்தோத்திரம் மாதிரி, அப்படியே நெட்டுருப்போட வசதியாகத்தான் இருக்கிறது. அதை மனப்பாடம் செய்வது வழக்கமாகி விட்டிருக்கிறது.

அத்தனை வித்யார்த்திகளுக்கும் ஏட்டுச் சுவடியில் எழுதிக்கொடுப்பது என்றால் அதற்கே ஆயுச்காலம் போதாது. எனவே, எதையும் மனப்பாடம் (memorise) பண்ணுகிற மாதிரி கொடுப்பதே யுக்தம் என்று கண்டார்கள். பேச்சு நடையில் இருப்பது மறந்து போகும். எப்போதும் நாம் பேசிக்கொண்டே இருப்பதால், அதே நடையில் இருக்கிற பாடம் தனியாக மனஸில் நிற்காமல் உதிர்ந்து போய்விடும்.

ஆனால், அதுவே, ஒரு சந்தம், எதுகை, மோனை முதலானவைகளோடு சேர்ந்து செய்யுளாக (poetry) வந்து விட்டால், மனப்பாடம் செய்து மனஸில் மறக்காமல் பதித்துக் கொள்ளலாம். இதனால்தான், எந்த சாஸ்த்திரத்தையும் சுலோகங்களாகச் செய்து உருப்போட வைத்தார்கள். அச்சுப் புஸ்தங்கள் வருகிற வரையில், மகா பண்டிதர்களாக இருந்த பலர், ஒரு ஏட்டுச்சுவடிகூட இல்லாமல், ஞாபக சக்தியிலிருந்தே சகல சாஸ்திரங்ககளையும் கற்றுக்கொண்டு சொல்லி வந்தார்கள். 

அந்தக் காலத்தில், எல்லா சாஸ்திரங்களும்-வேதாந்தம், வைத்தியம், சங்கீதம் டிக் ஷனரிகூடத்தான்--சுலோகங்களாகத்தான் செய்யப்பட்டன. காரணம் என்ன? அப்போது அச்சுப் போட்டுப் புஸ்தகம் தயாரிக்கத் தெரியாது. எனவே கடைக்குப்போய் விலை கொடுத்து எத்தனை பிரதி வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்றால் முடியாது.


இப்போது புஸ்தகம் என்று ஒன்று இருப்பதால், 'பார்த்துக் 

கொள்வதற்குதான் (for ready reference) புஸ்தகம் இருக்கிறதே' என்று எவரும் எதையும், இப்படி மனசுக்குள் ஆழமாக வாங்கிக்கொள்ளாத நிலைமையையே பார்க்கிறோம். இன்று லைப்ரரிகள் வெளியே அதிகம். 


அக்காலத்திலோ எழுதப் படிக்கத்தெரியாதவர்கள்கூட , ரொம்பப் பேர்    தாங்களே 'வாக்கிங் லைப்ரரி'களாக (நடமாடும் வாசக சாலைகளாக) இருந்து வந்தார்கள். காரணம் நெட்டுருப் பழக்கம்தான். இப்படி நெட்டுருப் பண்ணுவதாலேயே புத்திக்கு ஒரு பலம் ஐகாக்ரியம் (concentration) ஒழுக்கம் (mental dicipline) இவையும் மாணாக்கருக்கு உண்டாயிற்று. நிறைய நேரம் இதே காரியமாக உட்கார்ந்தால்தானே, ஒரு விஷயம் மனப்பாடம் ஆகும்? 

ஆதலால் மாணாக்கர்களின் புத்தியைக் கன்னாபின்னா என்று பல விஷயங்களில் போகாமல் கட்டிப்போட்டுப் படிப்பிலேயே வைத்திருப்பதற்கு, இப்படி மனப்பாடம் பண்ணுவது ரொம்ப சகாயம் இருந்தது. இதற்கு வசதியாக சகல சாஸ்திரங்ககளையும் யன்ஸ்களையும் பத்யமாக (poetry) எழுதி வைத்தார்கள். கத்யம், பத்யம் என்று இரண்டு.-கத்யம் 'பரோஸ்'; பத்யம்-'பொயட்ரி'.

சுலோக ரூபத்தில் வெகு அழகாக 'அமர கோச'த்தை எழுதினான் அமரசிம்மன். அதிலே ஹிந்துமத தெய்வங்களின் பெயர்கள் வருகிறபோது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு என்னென்ன முக்கியமான பெயர்கள் உண்டோ அத்தனையும், கொஞ்சங்கூட மதபேத புத்தியில்லாமல், அடுக்கிகொண்டு போவான். அதை கேட்டாலே, அகராதியாகத் தோன்றாது. 

அர்ச்சனை போல -- நாமாவளி போல -- தோன்றும். இதோ 'சம்பு ' என்ற வார்த்தைக்கு பிரதிபதங்களாக, 'அமரம்' சொல்வதை படியுங்கள்.

       சம்பு; ஈசு: பசுபதி; சிவ: சூலி மகேஸ்வர: |
       ஈச்வர: சர்வ ஈசான: சந்த்ரசேகர: ||
       பூதச: கண்டபரக:  கிரீசோ கிரீசோ ம்ருட: |
       ம்ருயுஞ்ஜய:  கிருத்திவாஸா : பினாகீ பிரமாததிப்: ||

அமரசிம்மன் பகவந் நாமாக்களை ரொம்பவும் ஆசையோடு சொல்லிக்கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. ஆரம்ப மாணவர்களும் நினைவு வைத்துக்கொள்கிற மாதிரி சுலபமாக லலிதமாகப் பதங்களைப் போட்டிருக்கிறான்.

'இந்திரா' என்ற வார்த்தை வந்தவுடன், இப்படியே மகாலக்ஷ்மியைப் பற்றிப் பொழிகிறான்.கேட்கவே லக்ஷ்மிகரமாக இருக்கும்.

      இந்திரா லோகமாதா மா க்ஷீரோததனயா ரமா
      பார்கவி லோகஜனனீ க்ஷீர ஸாகரகரகன்யகா 
      லக்ஷிமீ:  பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீ: ஹரிப்ரியா 

இப்படிப் போகிறது. டிக் ஷனரி மாதிரி இல்லை; ஸ்தோத்திரமாக இருக்கிறது !

இப்படிப் பக்ஷபாதமில்லாமல் அர்த்தம் சொன்ன அமர சிம்மனுக்கும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பக்ஷபாதம் வந்ததுதான் வேடிக்கை.  

'பௌத்த மதம் ' என்று வந்தால் மட்டும் கொஞ்சம் மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குப் போகவில்லை. நியாயமாகப்  பார்த்தால் பௌத்தத்தைவிட, ஹிந்து மதத்திடம்தான் அவனுக்கு விரோதம் அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளைப் பற்றிச் சொல்லாமலிருப்பது, ஹிம்ஸை இருப்பதால் யக்ஞம் கூடச் செய்யக்கூடாது என்பது ஆகிய கொள்கைகளில் ஜைனம், பௌத்தம் இரண்டுமே வைதிகத்துக்கு விரோதமானவை.  அவற்றுக்குள் இம்மாதிரி ஒற்றுமை அம்சங்கள் நிறைய இருக்கின்றன.

பொதுவாக அடுத்த ஊரில் அல்லது அடுத்த தெருவில் நம் பரம விரோதியிருக்கிறான் என்றால்கூட, அவனிடம் நமக்கு அதிகம் போட்டியிராது. அதிக வயிற்றெரிச்சல்இராது; ஆனால், பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டில் நமக்குக் கிட்டத்தில் இருக்கிறானே, இவனுக்கு நம்மிடத்தில் அத்தனை விரோதம் இல்லாவிட்டால் கூட, இவனைப் பார்த்துதான நமக்கு அசூயை. ஆத்திரம் ஜாஸ்தியாக இருக்கும்.  இவனை எப்படி மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருப்போம். இதே மாதிரி தன்  மதத்துக்கு ரொம்ப வித்தியாசம் இருக்கிற வைதிக மதத்தைவிட, அதற்கு ரொம்ப ஒற்றுமை உள்ள பௌத்தத்தை மட்டம் தட்டுவதிலேயே அமரசிம்மன் தன நிகண்டுவில், ஹிந்து மத வார்த்தைகளுக்கு நியாயமாக அர்த்தம் பண்ணிவிட்டு, புத்த மத வார்த்தைகள் என்று வரும்போது என்ன பண்ணினான்?

istockphoto 4267812 buddhist icons reversed jpg


புத்தரைக் குறிப்பிடும் வார்த்தை வரிசையாக சொல்ல நேர்ந்தபோது, அவருக்கென்றே பிரசித்தமாக இருக்கிற பெயர்களை -- "ததாகதர்"; (லஷியத்திலேயே செல்கிறவர்) போன்ற பெயர்களை அமரசிம்மன் சொல்லவே இல்லை. பொதுவான பெயர்கள் சிலவற்றை மட்டும், "இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியாய் இருக்கட்டும்" என்கிற மாதிரி சொல்லி விட்டான். அதோடு நிற்கவில்லை. 'ததாகதர், சாக்யமுனி' முதலான பெயர்களை எல்லாம் ஜீனருடையதாக (மகாவீரருடையதாக) ஆக்குகிறான் !  புத்தர்ருடைய 'பாடி-கார்ட்' ஆக (மெய்காவலராக) ஸூகதர் என்று இருந்தார். அவர் பெயரைக்கூட தன மதாசாரியரான ஜீனருடைய பெயர்களில் ஒன்றாகவே கொடுக்கிறான்.


ஆனால், ஹிந்து மதத்திடம் இப்படியெல்லாம் மனகோணல் (prejudice) எதுவும் காட்டவில்லை. ஹிந்துகளுக்குள்ளேயே வைஷ்ணவர்கள்,சைவர்களுக்கிடையே இருக்கக்கூடிய பரஸ்பர "ப்ரெஜுடிஸ்' கூட அமரசிம்மனுக்கு இல்லை. ஈச்வரன் பெயர்களைச் சொல்கிறமாதிரி, மகாவிஷ்ணுவின் நாமாக்களைக் கொடுக்கிறான். அதனால்தான் சைவ, வைஷ்ணவ பேதமில்லாமல் எல்லா மாணவர்களும் 'அமரத்தை' நெட்டுருப்போடும் பழக்கம் நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. 

அதனாலேயே இன்றும் அழியாப் புகழ் பெற்றதாக சம்ஸ்கிருத்தின் அகராதியாக "அமரகோசம்"  இருந்து  வருகிறது.